செவ்வாய், 28 டிசம்பர், 2010

பேரரசின் ஆசை ஈடேறுமா? (2)

கியூபாவின் நவீன வரலாறு என்பது 'இந்தியாவில்' இருந்துதான் தொடங்குகிறது. தங்கம் குவிக்கும் ஆசையால் உந்தப்பட்டு, இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்ட ஸ்பெயின் நாட்டுக் கடலோடி கொலம்பஸ், அக்டோபர் 28, 1492-ம் ஆண்டு கரையிறங்கிய இடம் கியூபா - அதாவது கரீபியன் தீவுகள்.

டினோசார் எலும்புக்கூடு போல ஒரு பெரிய தீவையும், சுற்றிலும் மீனுக்குப் போடப்பட்ட பொரி போல மிதக்கும் சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய கியூபாவில் வாழ்ந்து வந்த சிவப்பிந்திய பூர்வகுடிகள் கொலம்பஸ் மற்றும் தொடர்ந்து வந்த ஸ்பானியர்களால் நரவேட்டையாடப்பட்டு பூண்டோடு ஒழிக்கப்பட்டனர்.

இன்று அங்கு வாழ்வது ஸ்பானியர்கள் (65 விழுக்காடு); ஸ்பானிய-பூர்வகுடி-கறுப்பின கலப்பினத்தவர் (25 விழுக்காடு); மற்றும் மனித வளம் அருகிப் போனதால், உழைப்புக்காக அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கர்கள் (10 விழுக்காடு). இவர்கள் அனைவரும் இணைந்து உருவான தேசம்தான் இன்றைய கியூபா.

38 ஆண்டுகள் ஸ்பெயினிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது கியூபா. 1820களில் லத்தீன் (தென்) அமெரிக்க நாடுகள் ஸ்பெயினுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து சுதந்திர நாடுகளாக உருவானபோது கூட, கியூபா ஸ்பெயின் நாட்டுக்கு விசுவாசமாகத்தான் இருந்தது. அப்போது மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வந்த வடஅமெரிக்காவிடம் (இன்றைய யு.எஸ்) அடிமைப்பட நேரும் என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணம். அதாவது கியூபாவை பத்தோடு பதினொன்றாக, மற்றொரு மாநிலமாக இணைத்துக் கொள்வது அமெரிக்காவின் இரு நூற்றாண்டுக் கனவு; இன்று வரை நிறைவேறாத ஆசை. இதற்காக அமெரிக்கா செய்த அருவருப்பான தந்திரங்கள் ஒன்றா? இரண்டா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக