செவ்வாய், 28 டிசம்பர், 2010

தூரிகை

மனதின் சுழிப்பு
சட்டககமிடப்படாத கித்தான்கள்
தூரிகையின் சுழற்சி
சகல பாவனைகளிலும்
நிறைவேறாத மன ஓவியம்
இயங்கிக் கொண்டே இருக்கிறது
பூர்ண இச்சையால்
புறவண்ணங்கள் குலைக்கப்பட்டு
இழுதி தோய்த்து பூசி மெழுகி
உள்ளொளியின் செம்மை
வெண்மை
பிடிபடுவதில்லை எந்த சித்திரத்திலும்
வண்ணங்களெல்லாம்
சுயமழிந்த பின்பும் சாத்தியப்படுவதில்லை
விசித்திரத்தின் வரைவு
விசனமின்றி
வரையாத சித்திரமின்றி
இருந்து கொண்டேயிருக்கிறது
வாழ்க்கை
வண்ணங்களுக்கு பழிப்பு காட்டியபடியே
தூரிகையின் கர்வத்தை
பொடிபடுத்தி குழைத்து
பூசிக்கொண்டபடியே
உருவாகி-அழிகிறது
உருவாகிறது
பேரண்ட ஓவியம்.

(நம்பர் 1 நாவல் இதழில் வெளியானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக