கியூபப் புரட்சிக்கு முன்னர் கியூபாவின் விளை நிலங்களில் 75 விழுக்காடும், மொத்த சர்க்கரை உற்பத்தியில் 40 விழுக்காடும், கனிமச் சுரங்கங்கள், மின்சாரம் மற்றும் தொலைபேசிச் சேவையில் 90 விழுக்காடும், பெட்ரோலிய உற்பத்தியில் 100 விழுக்காடும் அமெரிக்கர்களுக்கே சொந்தம். புரட்சிக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. அத்தனையும் நாட்டுடைமையாக்கப்பட்டன.
இதற்கெல்லாம் பதிலடியாக கியூபாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வந்த சர்க்கரை இறக்குமதிக்கு முதலில் தடை விதித்தது அமெரிக்கா. பின்னர் அது கியூபாவுக்கு எதிரான பொருளாதாரப் போராக மாறியது. ஆனால் சோவியத் ஒன்றியம் முழுமையாகக் கைகொடுத்தது.
சோவியத் ஒன்றியத்தின் சிதைவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் கியூபாவின் பொருளாதாரத்தை கடும் நெருக்கடியில் தள்ளின. இனி வேறு வழியில்லை, அந்நாடு அமெரிக்காவிடம் சரணாகதி அடைய வேண்டியதுதான் எனப் பலரும் நினைத்த வேளையில், பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு இறையாண்மையுள்ள சுதந்திர நாடாகவே நீடிக்கிறது கியூபா.
அமெரிக்க டாலர் வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் 1993-ல் கியூபா சட்டபூர்வமாக்கியது. 2004 வரை டாலர் முக்கிய செலாவணியாக (கரன்சியாக) பயன்பாட்டில் இருந்தது. கியூபாவில் சுற்றுலாத் தொழில் பெருமளவுக்கு வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏழை-பணக்காரன் என்ற வேறுபாட்டைத் தீர்மானிப்பதே டாலர் என்றாகிப் போனது. உடனடியாக செயலில் இறங்கிய கியூப அரசு, புதிய செலாவணிக் கொள்கை மூலம் புழக்கத்தில் இருந்து டாலரை அகற்றத் திட்டமிட்டது.
டாலர்களை கியூப நாணயமான பெசோவுக்கு மாற்ற வேண்டுமானால் கூடுதலாக 10 சதவீதம் மேல் வரி விதிக்கப்பட்டது. இந்த மேல்வரி யூரோ, கனடா டாலர் போன்ற மற்ற நாணயங்களுக்கு கிடையாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் டாலருக்குப் பதில் மற்ற நாணயங்களைக் கொண்டுவரத் தொடங்கினர். நாட்டுக்குள் டாலர் நுழைவது தன்னியல்பாகவே தடுக்கப்பட்டது. இன்று கியூபாவின் பல சுற்றுலாத் தளங்களில் பரிவர்த்தனைகளில் நேரடியாக யூரோவே வாங்கிக் கொள்ளப்படுகிறது. கியூபா அமெரிக்காவுக்கு அடிபணியாமல் இருப்பதன் சூட்சுமம் இதில்தான் அடங்கியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக